சுஷ்மா ஸ்வராஜின் இறுதிச் சடங்கில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.படங்கள்: பிடிஐ 
இந்தியா

இந்தியாவின் புகழை சர்வதேச அளவில் பரப்பியவர்: மத்திய அமைச்சர் அமித் ஷா புகழாரம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

சர்வதேச அரங்கில் இந்தியாவின் புகழை பரவச் செய்தவர் சுஷ்மா ஸ்வராஜ் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று முன்தினம் இரவு காலமானார். இதையடுத்து அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:

கோடிக்கணக்கான பாஜக தொண்டர்களை கண்ணீர்க் கடலில் மூழ்கடித்து விட்டுச் சென்றுவிட்டார் சுஷ்மா ஸ்வராஜ். அவரது மரணம் எதிர்பாராதது. முதல்வர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், மத்திய அமைச்சர் என பல பதவிகளில் இருந்தவர் சுஷ்மா.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது இந்தியாவின் புகழை சர்வதேச அரங்கில் ஒலிக்கச் செய்தவர். அவரது நடவடிக்கைகளால் இந்தியாவின் புகழ் மேம்பட்டது.

அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது இழப்பு பாஜகவுக்கு மட்டுமல்ல..தேசிய அரசியலுக்கே மிகப்பெரிய இழப்பாக உள்ளது. அரசியல் வானில் பிரகாசமான நட்சத்திரமாக வலம் வந்தவர் சுஷ்மா. அவரது சேவைகளை நாடு என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.

இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். - பிடிஐ

SCROLL FOR NEXT