புதுடெல்லி
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 பிரிவை நீக்கிய மத்திய அரசின் முடிவு வரலாற்றுச் சிறப்பானது, துணிச்சலானது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அதேசமயம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி, நெருப்போடு அரசு விளையாடுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்
கடந்த 1954-ம் ஆண்டு அரசமைப்புச்சட்டம் 370 பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமை அந்தஸ்தை மத்தியஅரசு இன்று ரத்து செய்தது. அதற்கான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வந்தார். நீண்ட விவாதத்துக்குப்பின் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தின்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட உள்ளது. சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும், சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவு குறித்து பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி விடுத்த அறிக்கையில் கூறுகையில்,
" வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மக்களின் வளர்ச்சி, அமைதி, மேம்பாடு ஆகியவற்றுக்காக நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
ஜனசங்கம் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்பது கொள்கையாக இருந்தது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த 370 பிரிவு திரும்பப் பெறப்பட்டது தேசிய ஒருமைப்பாட்டுக்காக எடுக்கப்பட்ட மிக துணிச்சலான முடிவு " எனத் தெரிவித்துள்ளார்.
நெருப்புடன் விளையாடுகிறார்கள்
காங்கிரஸ் மூத்தத் தலைவர் வீரப்ப மொய்லி கூறுகையில்,
" மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தங்களின் அரசியல் திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில், நாட்டின் கருத்தொற்றுமையின்றி, மாநில அரசுகளுடனும், மக்களிடமும் எந்தவிதமான கருத்தும் கேட்காமல் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 பிரிவை ரத்து செய்துள்ளது.
இது நெருப்போடு மத்திய அரசு விளையாடுவதற்குச் சமம். மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் மீது விழுந்த தாக்குதல்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தான 370 பிரிவை நீக்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு வெளியிட்டது அறத்துக்கு மாறானது, சட்டவிரோதமானது, அரசமைப்புக்கு எதிரானது. இது காஷ்மீரின் வரலாற்றைத் திருத்தி எழுத முயல்கிறது " எனத் தெரிவித்துள்ளார்.
பிடிஐ