காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியிருப்பது ஜம்மு - காஷ்மீர் மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் நடவடிக்கை என அம்மாநில முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஓமர் அப்துல்லா கூறியிருக்கிறார்.
முன்னதாக இன்று (திங்கள்கிழமை) காலை மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்படுகிறது என அறிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து ஓமர் அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியுள்ளது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த சிறப்பு அந்தஸ்து காஷ்மீரில் மற்ற மாநில மக்கள் சொத்துகளை வாங்குவதைத் தடுத்திருந்தது.
ஆனால், இன்று அந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் மத்திய அரசு தன்னிச்சையாக அதிர்ச்சிகரமான முடிவை அமல்படுத்தியுள்ளது. இந்த முடிவு அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
1947-ல் காஷ்மீரை இணைக்கும்போது காஷ்மீர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அரசு இப்போது மீறி மக்கள் அரசின் மீது கொண்டிருந்த நம்பிக்கையைச் சீர்குலைத்திருக்கிறது. இது காஷ்மீர் மக்கள் மீதான திணிப்பு.
ஒட்டுமொத்த காஷ்மீர் பள்ளத்தாக்கையும் காவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டு இப்படி ஒரு அறிவிப்பை அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இந்த அரசியல் சாசனத்துக்கு எதிரானது" எனத் தெரிவித்துள்ளார்.