புதுடெல்லி
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
காஷ்மீர் அரசின் உத்தரவின்படி அமர்நாத் பக்தர்கள், சுற்றுலா பயணி கள் மாநிலத்தை விட்டு அவசரமாக வெளியேறி வருகின்றனர். மத்திய படைகள் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருவதால் மாநிலம் முழுவதும் பதற்றம் பரவுகிறது. அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி யில் இருந்து ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 5 தற் கொலைப்படைத் தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவியிருப்ப தாகவும் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் வகையில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த அவர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத் துறை எச்சரித்துள்ளது.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லை யில் மேலும் 15 தற்கொலைப்படை தீவிரவாதிகள் காத்திருக்கின்றனர். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசா ரின் தம்பி இப்ராஹிம் அசாரும் அங்கு முகாமிட்டுள்ளார் என்று உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தீவிரவாதிகள் ஊடுருவலை உறுதிப்படுத்தும் வகையில் பாகிஸ் தான் ராணுவம் பயன்படுத்தும் கண்ணிவெடி குண்டுகள், தொலை நோக்கி பொருத்தப்பட்ட துப்பாக்கி உள்ளிட்டவை அமர்நாத் புனித யாத் திரை பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டன.
இதைத் தொடர்ந்து அமர்நாத் புனித யாத்திரை நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டது. அமர்நாத் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணி கள் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு மாநில அரசு உத்தரவிட்டது.
பக்தர்கள், சுற்றுலா பயணிகளை வெளியேற்ற மாநில போக்குவரத் துத் துறை சார்பில் நேற்று ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஜம்மு ரயில் நிலையத்தில் ஆயிரக் கணக்கானோர் குவிந்தனர். ஸ்ரீநகர், ஜம்மு விமான நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது.
பக்தர்கள், சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல விமானப்படையின் உதவியை காஷ்மீர் அரசு நாடியுள்ளது. அதன்படி, விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் மூலம் பயணிகளை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 230 பயணிகளை அழைத்துச் செல்ல முடியும்.
என்ஐடி விடுதி மூடல்
ஸ்ரீநகரில் உள்ள என்ஐடி கல்வி நிறுவனத்தில் வெளிமாவட்டம், வெளிமாநில மாணவர்கள் ஏராள மானோர் கல்வி பயில்கின்றனர். தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அங்குள்ள மாணவர் விடுதி மூடப் பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சுமார் 800 மாணவர்கள் நேற்று தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். பாதுகாப்பு கருதி காஷ்மீர் முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
மச்சைல் மாதா யாத்திரை ரத்து
காஷ்மீரின் கிஸ்ட்வார் மாவட் டம், மச்சைல் கிராமத்தில் துர்கை அம்மன் கோயில் உள்ளது. 'மச்சைல் மாதா’ என்றழைக்கப்படும் இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் வரை புனித யாத்திரை நடைபெறும். இந்த ஆண்டு புனித யாத்திரை கடந்த 25-ம் தேதி தொடங்கியது. காஷ்மீரில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக 'மச்சைல் மாதா' புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
விஎச்பி அமைப்பு சார்பில் காஷ் மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் புத்தா அமர்நாத் யாத்திரை 10 நாட்கள் நடத்தப்படும். இந்த யாத்திரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் விஎச்பி சார்பில் குல்காம் மாவட்டத் தில் நடத்தப்படும் நாக யாத்திரையும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
உஷார் நிலை
ஸ்ரீநகர், ஜம்முவில் உள்ள விமானப்படைத் தளங்கள், மாநி லம் முழுவதும் உள்ள ராணுவ முகாம்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஜம்மு, ஸ்ரீநக ரின் முக்கிய பகுதிகள் ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் கண் காணிக்கப்படுகின்றன. சிஆர்பிஎப் உள்ளிட்ட மத்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 38,000 வீரர்கள் காஷ்மீருக்கு கூடுதலாக அனுப்பப்பட்டு வருகின்றனர்.
தீவிரவாத முகாம் மீது தாக்குதல்
தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய ஏதுவாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைப் பகுதியில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
மேலும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் பீரங்கி குண்டுகளை வீசி வருகிறது. இதில் தீவிரவாத முகாம்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தடை செய்யப்பட்ட கொத்து வெடிகுண்டுகளை இந்திய ராணுவம் பயன்படுத்துவதாக பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
அரசியல் நிலவரம்
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் சட்டப்பிரிவு களை நீக்கும் நோக்கில் படைகள் குவிக்கப்பட்டு வருவதாக மாநில கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி தலைமையில் அனைத்து கட்சி களின் தலைவர்கள் ஆளுநர் சத்ய பால் மாலிக்கை நகரில் நேற்று முன்தினம் இரவு சந்தித்துப் பேசினர். அவர்களைத் தொடர்ந்து தேசிய மாநாடு கட்சியின் மூத்த தலைவர் ஒமர் அப்துல்லா நேற்று ஆளுநரை சந்தித்தார்.
இதன்பின் அவர் நிருபர்களிடம் கூறும்போது, "காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் நீக்கப்படாது என்று ஆளுநர் கூறு கிறார். ஆனால் ஆளுநர் கூறுவது இறுதி வார்த்தை அல்ல. எதற்காக காஷ்மீரில் படைகள் குவிக்கப்படு கின்றன என்பது குறித்து மத்திய அரசு நேரடியாக விளக்கம் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் டெல்லியில் நேற்று கூறியபோது, "காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரம் சுற்றுலா துறையை நம்பி உள்ளது. அந்த மாநிலத்தில் மத்திய அரசு பதற் றத்தை ஏற்படுத்துகிறது. காஷ்மீரில் பணியாற்றும் சுமார் 2.50 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர். காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமை யாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட் டுள்ள அறிக்கையில்,"காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவுகளை நீக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த மாநிலத்தில் அரசியல் சாகசங்களை நிகழ்த்த வேண்டாம்" என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் வேண்டுகோள்
ஆளுநர் சத்யபால் மாலிக் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "அமர் நாத் யாத்திரையை சீர்குலைக்கும் நோக்கில் தாக்குதல் நடத்த தீவிர வாதிகள் திட்டமிட்டிருப்பதை உள வுத் துறை உறுதி செய்துள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவ வசதி யாக எல்லையில் பாகிஸ்தான் ராணு வம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன்காரணமாகவே படைகள் குவிக்கப்பட்டுள்ளன. பாது காப்பு கருதி அமர்நாத் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.
அலைமோதும் மக்கள்
காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அத்தியாவசி யப் பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள பொதுமக்கள் அவசரம் காட்டுகின்றனர். இதன் காரணமாக மளிகை கடைகள், மருந்து கடைகள், பெட்ரோல் நிலை யங்களில் கூட்டம் அலைமோது கிறது. வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களிலும் நீண்ட வரிசை காணப்படுகிறது. இதனால் அத்தி யாவசிய பொருட்கள், எரிபொரு ளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளது.
தீவிரவாத அச்சுறுத்தல், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரங்களை தாண்டி வேறு சில காரணங்களுக் காகவும் காஷ்மீரில் படைகள் குவிக் கப்பட்டு வருவதாகக் கூறப்படு கிறது.
வரும் சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி காஷ்மீரில் தேசிய கொடி யேற்றி உரையாற்ற திட்டமிட்டிருப்ப தாகக் கூறப்படுகிறது. மேலும் காஷ் மீரை பிரித்து ஜம்மு, காஷ்மீர் பள்ளத் தாக்கு பகுதிகளை தனித்தனி மாநிலங்களாகவும் லடாக் பகு தியை யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்க மத்திய அரசு முடிவு செய் திருப்பதாகக் கூறப்படுகிறது.