புதுடெல்லி
முத்தலாக் சட்டத்தை அதிமுகவினர் எதிர்த்தார்களா, ஆதரித்தார்களா என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா கடந்த 25-ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த மசோதா நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்ட முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப் பப்படும். அவர் ஒப்புதல் அளித்த பிறகு மசோதா சட்டமாகும்.
இந்தநிலையில் முத்தலாக் மசோதா பற்றி அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில் ‘‘முத்தலாக் தண்டனைச் சட்ட மசோதா செல்லாது என்று மிக விளக்கமாக மாநிலங்கள் அவையில் அஇஅதிமுக தலைவர் உரையாற்றினார். அவை உறுப்பினர்கள் அவரது உரையைப் பாராட்டினார்கள். மசோதாவின் மீது வாக்கெடுப்பு, அஇஅதிமுக உறுப்பினர்கள் யாரும் அவையில் இல்லை. மசோதாவை அஇஅதிமுக கட்சியினர் எதிர்த்தார்களா, ஆதரித்தார்களா என்பது விடுகதை’’ எனக் கூறினார்.