பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு கோயிலில் அனுமதி மறுப்பு: உபியில் தலித் மக்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

முசாபர்நகர்

உத்தரபிரதேசத்தில், கோவிலில் சில துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தண்ணீர் குடிக்க அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அர்ச்சகரை கைது செய்யும்படி தலித் மக்கள் ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

தானா பவன் நகரில் நடைபெற்ற இப்போராட்டம் குறித்து காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்த விவரம்:

ஷாம்லி மாவட்டத்தில் தானா பவன் நகரில் உள்ள கோவிலுக்கு வெளியே வடிகால் சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு தாகம் எடுக்கவே கோவில் வளாகத்தில் உள்ள கைப்பம்பிலிருந்து தண்ணீர் எடுத்துவரச் சென்றுள்ளனர். 

அப்போது கோவிலில் உள்ள அர்ச்சகர்,''குடிநீர் எடுக்க உங்களுக்கு இங்கே அனுமதியில்லை. நீங்கள் உள்ளே வரக்கூடாது'' என்று கூறி அவர்களை வெளியே தள்ளி கதவை மூடியுள்ளார். 

அப்பகுதியைச் சேர்ந்த வால்மீகி பிரிவைச் சேர்ந்த தலித் மக்கள் கூட்டமாகத் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோவில் அர்ச்சகர் மீது எப்ஐஆர் வழக்குப் பதிவு செய்யவேண்டுமென கோரிக்கை எழுப்பினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். மேலும், இதுகுறித்து நிச்சயமாக விசாரணை நடத்தப்படும் அவர்களிடம் உறுதியளிக்கப்பட்டது.

இவ்வாறு காவல்துறை தெரிவித்துள்ளது.

- பிடிஐ
 

SCROLL FOR NEXT