இந்தியா

காஷ்மீரில் கனமழை: அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

செய்திப்பிரிவு

ஜம்மு

காஷ்மீரில் பலத்த மழை பெய்து வருவதால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தெற்கு காஷ்மீரில் உள்ள இமய மலைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோயில் உள்ளது. இங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். 
அனந்த்நாக் மாவட்டத்தில் 36 கி.மீ. தொலைவு கொண்ட பாரம்பரிய பஹல்காம் வழியிலும் கந்தர்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. பால்தால் வழியிலும் யாத்திரை நடைபெறுகிறது.

 ஜூலை 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ம் தேதி, 46 நாட்கள் யாத்திரை நடைபெற உள்ளது. யாத்திரைக்கு நாடு முழுவதி லும் இருந்து பல லட்சம் பேர் பதிவு செய்து உள்ளனர். கடந்த ஆண்டு 60 நாட்கள் இந்த யாத்திரை நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரம் பேர் பனி லிங்கத்தை தரிசனம் செய்தனர். 

இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் யாத்திரை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 22 நாட்களில் 2,85,381 பேர் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.இந்தநிலையில் காஷ்மீரில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. சில இடங்களில்  வெயில் இல்லாமல் மந்தமான வானிலையும் நிலவி வருகிறது.

இதையடுத்து அமர்நாத் யாத்திரையை தற்காலிகமாக அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். நிலைமை சீரடைந்ததும் வழக்கம்போல் அமர்நாத் யாத்திரை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே அடுத்த சில தினங்களில் காஷ்மீரில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

SCROLL FOR NEXT