மும்பை
கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து முடிவு தெரியும் வரை பெங்களூருக்கு திரும்பப் போவதில்லை என அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத, காங்கிரஸ் கூட் டணி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த இரு வாரங்களில் 12 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜி னாமா செய்தனர். பெரும்பான்மையை இழந்த குமாரசாமி பதவி விலக வேண்டும் என பாஜக போராட்டத்தில் குதித்தது.
எனவே குமாரசாமி கடந்த 12-ம் தேதி சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க தயா ராக இருப்பதாக அறிவித்தார். இதனி டையே அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா மனு மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம், '' அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்கும்படி பேரவைத் தலைவருக்கு உத்தரவிட முடியாது. காங்கிரஸ்,மஜத கொறடா நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்குமாறு அதி ருப்தி எம்எல்ஏக்களை கட்டாயப்படுத் தக்கூடாது'' என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், கடந்த வியாழக் கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத் தப்படும் என அறிவிக்கப்பட்டது. மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேர் உட்பட காங்கிரஸ், மஜதவைச் சேர்ந்த மேலும் 3 பேர் அவைக்கு வரவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 2 முறை ஆளுநர் கெடு விதித்தபோதும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. அதேசமயம் அவை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் இன்று கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் ‘‘நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு தெரியும் வரை நாங்கள் பெங்களூருக்கு திரும்பப் போவதில்லை. நாங்கள் பாஜகவிடம் பணம் வாங்கியதாக அபாண்ட குற்றச்சாட்டை ஆளும் கட்சி கூறியுள்ளது. இதில் துளியும் உண்மை இல்லை. நியாயம் கிடைக்கவேண்டும். மக்கள் விரோத அரசு வீழ்த்தப்பட வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்’’ எனக் கூறினர்.