தெலங்கானா முதல்வர் கே. சந்திர சேகர ராவ், அரசு நலத்திட்டங்களை நேரில் ஆய்வு செய்வதற்காக ‘ஹரித ஹாரம்’திட்டத்தை அறிவித் துள்ளார். இத்திட்டத்தின்படி, அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வுள்ளார்.
இதற்காக ரூ. 5 கோடி செலவில் குண்டு துளைக்காத சொகுசு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த பஸ்ஸில் நவீன படுக்கை அறை, கழிப்பறை, சிறிய ஆலோசனைக்கூடம், பஸ்ஸின் மேற்புறம் சென்று ஆங்காங்கே பொது கூட்டங்களில் பங்கேற்கும் வசதி போன்றவை வடிவமைக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி இதனைக் கண்டித்துள்ளது. அக்கட்சி எம்.பி. ஜி. ஹனுமந்த ராவ் இதுதொடர்பாகக் கூறும்போது, “தேர்தல் பிரசாரத்தின் போது சந்திர சேகர ராவ் சாதாரண பஸ்ஸில் சுற்று பயணம் மேற்கொண்டார். ஆனால் முதல்வரான பின்னர் ரூ. 5 கோடி செலவில் பஸ் தேவையா? இது மக்கள் பணத்தை வீணடிக்கும் செயல்.
இதற்குப் பதிலாக அந்த பணத்தில் ஏழை மக்களுக்காக பயனுள்ள திட்டங்களுக்கு செலவு செய்யலாம்” என விமர்சித்துள்ளார்.
இது குறித்து தெலங்கானா முதல்வர் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:
அரசு நலத்திட்டங்கள் முழுமை யாக அமலாக்கப்படுகிறதா? ஏரிகள் தூர்வாரும் திட்டம் சரிவர செயல் படுத்தப்படுகிறதா? என அறிந்து கொள்ளும் வகையில் முதல்வர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
இதன் காரணமாக இனி மாதம் 10 நாட்கள் வரை பஸ்ஸில் பயணம் மேற்கொள்ள வேண்டி இருப்பதால், பாதுகாப்பு கருதியும், நவீன வசதிகளுடனும் இந்த சொகுசு பஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.