இம்பால்: மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் உள்ள லிட்டன் கிராமத்தில் தங்குல் நாகா மற்றும் குகி சமூகத்தினரிடையே கடந்த சனிக்கிழமை மீண்டும் கடும் மோதல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் தாஸ் ஞாயிற்றுக் கிழமை முதல் தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உக்ருல் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு இணைய சேவையை ரத்து செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில்தான் ஆட்சியரின் உத்தரவையும் மீறி திங்கள்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குத் தீ வைக்கத் தொடங்கினர். செவ்வாய்க் கிழமை காலை நிலவரப்படி சுமார் 50 வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இரு தரப்பினரிடையே துப்பாக்கிச்சூடும் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
“லிட்டன் சம்பவத்தைத் தொடர்ந்து கொன்ஷாகுல் கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளில் உண்மையில்லை. இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.