பாட்னா: பிஹாரில் மாணவர்களுடன் கல்விச் சுற்றுலா சென்றபோது மது அருந்தியதாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “முதல்வரின் பிஹார் தர்ஷன் திட்டத்தின் கீழ் இந்த ஆசிரியர்கள், மாணவர்களுடன் நேபாளத்துக்கு கல்விச் சுற்றுலா சென்றனர். அவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு திரும்பும்போது, சுபால் மாவட்டம், பீம்நகரில் உள்ள நேபாள எல்லைச் சாவடியில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 5 ஆசிரியர்களும் மது அருந்தியிருப்பது சோதனையில் தெரியவந்ததால் கைது செய்யப்பட்டனர்’’ என்றனர்.
பிஹாரில் முழு மதுவிலக்கு அமலில் உள்ளது. இதன்படி மதுவை உட்கொள்வது, வாங்குவது, விற்பது, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர்களின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.