சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, டெல்லி ராஜ பாதை யில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி யில் கலந்துகொண்ட பிரதமர் மோடி குண்டு துளைக்காத உடை அணியவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த நாள் பாதுகாப்பு படையினருக்கு மிகவும் சவாலானதாக அமைந்திருந்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று ஐ.நா. அறிவித்தது. இதன்படி நேற்று உலகம் முழுவதும் முதலாவது சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் ஏற்பாடு செய் யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்தர மோடி தலைமையில் யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ மாணவி கள், ஆசிரியர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அரசு அதிகாரிகள், பெரு நிறுவன அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 35,000 பேர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, ஆண்டுதோறும் குடியரசுதின அணிவகுப்பின் போது செய்யப்படுவதை மிஞ்சும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த பாதுகாப்புப் பணி மிகப் பெரிய சவாலாக அமைந்திருந்த தாகக் கருதப்படுகிறது.
நான்கு அடுக்குகளாக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் சுமார் 5,000 மத்திய பாதுகாப்பு படையினரும், 10,000 டெல்லி போலீஸாரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதுதவிர, இவர்களுக்கு உத்தரவுகள் பிறப்பித்து வெளியில் கட்டுப்படுத்தும் பணியில் மத்திய மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த 7,000 பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். யோகா பயிற்சிக்கான சில கட்டாய நடைமுறைகள் காரணமாக, வழக்கத்துக்கு மாறாக பாதுகாப்பு ஏற்பாடுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப் படுகிறது.
உதாரணமாக, பிரதமர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது குண்டு துளைக்காத உடைகளை உட்புறம் அணிந்து வருவது வழக்கம். ஆனால் யோகா பயிற்சிகளை செய்வதற்கு கடினமாக இருக்கும் என்பதால், 35 ஆயிரம் பேர் கலந்துகொண்ட போதிலும் இந்த நிகழ்ச்சியின்போது குண்டு துளைக்காத உடை அணிவதிலிருந்து பிரதமர் மோடிக்கு விலக்கு அளிக்கப் பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் முன் னிலையில் திறந்தவெளியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற போதி லும், பிரதமர் மோடிக்கு குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டும் ஏற்பாடு செய்யப்படவில்லை.
அதேநேரம், பாதுகாப்பு கருதி பிரதமர் யோகா செய்த பகுதிக்கு அருகே பள்ளி, கல்லூரி மாணவிகள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என பெண்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இது புதிய உத்தி ஆகும். இதன் காரணமாக, பிரதமருக்கு பாதுகாப்பு அளிப்பதில் பாது காப்புப் படையினருக்கு பெரிய அளவில் சிக்கல் ஏற்படவில்லை.
மேலும் வழக்கத்துக்கு மாறான மற்றொரு அம்சம் என்ன வெனில், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளும் பயிற்சிக்கு வந்த வர்களைப்போல சீருடை அணியா மல் யோகா பயிற்சிக்கான உடை களையே அணிந்திருந்தனர். எனினும், அவர்களின் இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிந்த ஆயு தங்கள் லேசாக புடைத்தபடி இருந்ததை வைத்து அவர்கள் பிரதமரின் பாதுகாப்புப் படையினர் தான் என கணிக்க முடிந்தது.
சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக திறந்தவெளியில் நடைபெற்ற இந்த யோகா பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்த மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில், ராட்சத பலூன்கள், மைக்ரோ விளக்குகள், பெரிய அளவிலான பட்டங்கள் மற்றும் கிளைடர்கள் பறக்கவிட திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் இது தீவிரவாத தாக்குதலுக்கு வாய்ப்பாகி விடும் என உளவுத் துறையினர் எச்ச ரிக்கை விடுத்ததால் கடைசி நேரத்தில் அந்த திட்டம் கைவிடப் பட்டது. இதன் காரணமாக, ‘டிரோன்’ எனப்படும் ஆள் இல்லாத விமானங்களின் உதவியால் போட்டோ மற்றும் விடியோ எடுக்கவும் தடை விதிக்கப்பட் டிருந்தது. இதுபோன்ற விஷயங்களை கண்காணிக்க விமானப்படையினரும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகிய இருவருக்கும் யோகா பயிற்சியில் பங்கேற்குமாறு மத்திய அரசின் சார்பில் சிறப்பு அழைப்பு அனுப்பப்பட் டிருந்தது.
இதில் கலந்துகொள்வதை கடந்த வெள்ளிக்கிழமை வரை உறுதி செய்யாத இவர்கள், கடைசி நேரத்தில் கலந்து கொள்வதாக தகவல் தெரி வித்தனர். அதன்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.