வீடு வாங்குவோரை பாதுகாக்கும் வகையில், மழைக்கால கூட்டத்தொடரில் மசோதா கொண்டுவரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்கள், 500 நகரங்கள் மேம்பாடு, அனைவருக்கும் வீடு திட்டத்தில் 2 கோடி வீடுகளை கட்டுவது ஆகிய மூன்று திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று தொடங்கிவைத்தார். இத் திட்டங்களுக்கான வழிகாட்டு நெறிகளையும் அவர் வெளியிட்டார்.
வீடு வாங்குவோரை பாதுகாப்பது அரசின் கடமை. இது தொடர்பாக மழைக்கால கூட்டத்தொடரில் மசோதா கொண்டுவரப்படும். வாயையும் வயிற்றையும் கட்டி தாங்கள் சேமிக்கும் பணத்தை வீடு வாங்க செலவிடும் மக்கள் ஏமாற்றப்பட்டால் எல்லாமே பறிபோய்விடுகிறது. இதை தடுக்கும் வகையில் புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மோடி கூறினார்.
இந்த விழாவில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், ஜம்மு துணை முதல்வர் நிர்மல் குமார் சிங், பல்வேறு மாநகராட்சிகளின் மேயர்கள், உள்ளாட்சி அமைப்பு களின் தலைவர்கள். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.