நாட்டின் ஐடி தலைநகராக விளங்கும் பெங்களூருவில் அதிகரித்துவரும் குப்பை பிரச்சினையால் அரசுக்கும், மாநகராட்சிக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க கர்நாடக அரசும், பெங்களூரு மாநகராட்சியும் சிங்கப்பூரிலும், சேலத்திலும் பின்பற்றப்படும் சுத்திகரிப்பு திட்டங்களைப் பின்பற்றி வருகின்றன. இருப்பினும் குப்பை பிரச்சினை முடிவுக்கு வராததால், 'பொது இடங்களில் குப்பைக் கொட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்' வசூலிக்கப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டது.
பெங்களூரு மாநகராட்சி நிர்வாக அதிகாரி விஜயபாஸ்கர், ஆணையர் குமார் நாயக் நேற்று நகர்வலம் மேற்கொண்டபோது மைசூரு வங்கி தலைமையகம் எதிரிலும், ஆரியபவன் ஹோட்டல், கே.ஜி. சாலையில் உள்ள அடிகாஸ் சிட்டி சென்டர் ஆகியவற்றின் முன்பாக குப்பை குவிந்து கிடந்ததைப் பார்த்தார். இதையடுத்து அந்த நிறுவனங் களிடமிருந்து அபராதமாக தலா ரூ.10 ஆயிரம் வசூலித்தனர்.
இதுகுறித்து மத்திய சட்டத் துறை அமைச்சர் சதானந்த கவுடா நேற்று பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, “பொது இடங்களை அசுத்தம் செய்பவர்களுக்கு தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்படும்” என்றார்.