இந்தியா

மத்திய அரசு பள்ளிகளில் சுமையற்ற கட்டாய பாடமாக யோகா

பிடிஐ

நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பட்டில் உள்ள பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு யோகா கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தேசிய யோகா பயிற்றுநர்கள் மாநாட்டில் அவர் பேசும்போது, "நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு யோகா கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் மேலும், ஆசிரியர் பயிற்சி திட்டங்களிலும் யோகா பயிற்சி சேர்க்கப்படவுள்ளது.

யோகாவை கட்டாயமாக்குவதால் மாணவர்களுக்கு எவ்வகையிலும் சுமை ஏற்படாது. ஏனெனில் 80% மதிப்பெண் செயல்முறை தேர்வில் வழங்கப்பட்டுவிடும். யோகாவை மாணவர்கள் முழுமையான ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.

யோகா பாடத்தில் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை படிப்புகளும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அடுத்த ஆண்டு (2016), டெல்லியில் தேசிய அளவிளான யோகா போட்டி நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் மாணவருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்" என்றார்.

மொபைல் ஆப்:

என்.சி.இ.ஆர்.டி. எனப்படும் தேசிய புத்தக கழகத்தின் சார்பில் வெளியிடப்படும் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து புத்தகங்களும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட மொபைல் செயலி வழியாக இலவசமாக பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என ஸ்மிருதி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT