மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து பிஹார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், ராஜினாமாவை வாபஸ் பெற மறுத்துவிட்டார்.
மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வியைச் சந்தித்ததையடுத்து பிஹார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார். இன்று அவர் தனது ராஜினாமா இறுதியானது என்றும், ராஜினாமாவைத் திரும்பப் பெற இயலாது என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் மாநிலத் தலைவர் வசிஷ்ட் நரைன் சிங் செய்தியாளர்களிடையே கூறுகையில், "நிதிஷ் குமார் தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெற மறுத்துள்ளதால் அவரே புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்குமாறு ஐக்கிய ஜனதா தளத்தின் சட்டமன்ற கட்சிக்குழு ஏகமனதாக கோரியுள்ளது" என்றார்.
"இது தொடர்பாக இன்று மாலை ஆளுனர் பாட்டீலை கட்சித் தலைவர் சர்த் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் சந்தித்து முடிவைத் தெரிவிப்பார்கள்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, "தோல்விக்குப் பொறுப்பேற்று நிதிஷ் குமார் ராஜினாமா செய்தாலும் சட்டப்பேரவையில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு தனிப் பெரும்பான்மை உள்ளது. எனவே ஆட்சிக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை. மேலும் 2015 சட்டப்பேரவைத் தேர்தலிலும் நிதிஷ் குமாரே கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்பார்" என்றார் சரத் யாதவ்.