இந்தியா

லக்வி விவகாரத்தில் நடுநிலை: சீன அமைச்சரிடம் சுஷ்மா வலியுறுத்தல்

பிடிஐ

தீவிரவாதி லக்வியை பாகிஸ்தான் மீண்டும் கைது செய்ய வலியுறுத்தும் இந்திய கோரிக்கையை ஐ.நா.வில் நீர்த்துப் போகச் செய்யும் வகையில் சீனா முடிவெடுத்திருப்பதற்கு சுஷ்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் நடைபெறும் சர்வதேச கொடையாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள சுஷ்மா ஸ்வராஜ், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது பாகிஸ்தான் தீவிரவாதி லக்வி விவகாரத்தில் சீன நிலைப்பாடு குறித்து சுஷ்மா ஸ்வராஜ் பேசினார்.

லக்வியை மீண்டும் கைது செய்ய லக்விக்கு எதிராக போதிய ஆதாரங்களை இந்தியா அளிக்கவில்லை என்று ஐ.நா. வில் சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்து சுஷ்மா கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர், "இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளுமே தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளில் நல்ல தீவிரவாதி, கெட்ட தீவிரவாதி என யாரும் இல்லை. எனவே, ல்கவி விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை சீனா கைவிட வேண்டும். இந்தியா - சீனா இடையேயான நல்லுறவு மேம்பட்டு வரும் நிலையில் தீவிரவாததுக்கு எதிராக இரு நாடுகளும் வெவ்வேறு கொள்கையைப் பின்பற்றுவது சரியல்ல" எனக் கூறினார்.

மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளி ஜகியூர் ரஹ்மான் லக்வி விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஐ.நா.விடம் இந்தியா முறையிட்டது. ஆனால் அதை தடுக்க சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

2008 நவம்பர் 26-ல் மும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் லக்வி.

இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன.

இந்தியாவின் வற்புறுத்தல் காரணமாக லக்வியையும் அவரது கூட்டாளிகள் 6 பேரையும் பாகிஸ்தான் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் லாகூர் உயர் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஏப்ரலில் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து லக்வியை மீண்டும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கக் வேண்டும் என்று ஐ.நா. சபையின் தீவிரவாத தடுப்பு குழுவிடம் இந்தியா முறை யிட்டுள்ளது. இதுதொடர்பாக ஐ.நா. சபை சார்பில் பாகிஸ்தான் அரசிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

தீவிரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கும் ஐ.நா. தீவிரவாத தடுப்பு குழுவில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10 நிரந்தமல்லாத நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

இதில் லக்வியை மீண்டும் கைது செய்ய அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளன. ஆனால் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. லக்விக்கு எதிராக போதிய ஆதாரங்களை இந்தியா அளிக்கவில்லை என்று சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT