புதுடெல்லி: தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் பணிகள் தமிழ்நாடு, மேற்கு வங்கம், உபி. உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்து வருகிறது.
வாக்காளர்கள் எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 4-ம் தேதி கடைசி நாளாகும். இதற்கு சில நாட்களே உள்ள நிலையில் உ.பி.யின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி, மாவட்ட வாரியாக 44 நிர்வாகிகளை நியமித்துள்ளது. இவர்களுக்கு எஸ்ஐஆர் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொறுப்பை கட்சியின் தலைவர் அகிலேஷ் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கோசி தொகுதி சமாஜ்வாதி எம்.பி. ராஜீவ் குமார் ராய் கூறுகையில், ‘‘எஸ்ஐஆர் மூலம் ஓபிசி மற்றும் தலித்துகளின் வாக்குகளை குறைக்கும் சதி உள்ளது. மவு நகர்ப்புற சட்டப்பேரவை தொகுதியில் சுமார் 20,000 பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதை காண முடிந்தது” என்றார்.
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க சமாஜ்வாதி முயற்சிக்கிறது. கடைசி நாளான டிசம்பர் 4-ம் தேதிக்கு பிறகு, ஆட்சேபனை கள் தாக்கல் செய்து திருத்தங்கள் செய்யமுடியும்.
இதற்கிடையில் உ.பி. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருப்பதால், எஸ்ஐஆர் பணிகளை நீட்டிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அகிலேஷ் வலியுறுத்தி உள்ளார்.