ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்யும் விவகாரத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா பரிந்துரையை தான் ஆதரிப்பதாக, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "கர்நாடக அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவும், அம்மாநில அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமாரும், சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர். ஆச்சார்யா மீது எனக்கு பெரும் மதிப்பு உண்டு. மேலும், மேல்முறையீட்டுக்கு அவர் பரிந்துரைப்பது சரியே என நான் நம்புகிறேன்.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்யத் தேவையில்லை என கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவு முதல்வர் சித்தராமையாவுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரமோ, ஜெ. வழக்கில் ஆச்சார்யா பரிந்துரையை தான் ஆதரிப்பதாக ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பில் குளறுபடிகள் உள்ளதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, "நான் நீதிமன்ற தீர்ப்புகளை எப்போதுமே விமர்சிப்பதில்லை. ஜெயலலிதா குற்றவாளி என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது நான் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேபோல், இப்போது அவரை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுவித்திருப்பது குறித்தும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என்றார்.