ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானதே என அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். மேலும், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதேபோல், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவையும் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பு வெளியானவுடன், சொத்துக் குவிப்பு வழக்கின் அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவிடம் கருத்து கேட்டபோது, "சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை முழுவதுமாக வாசிக்கும் முன்னர் எனது கருத்துகளை தெரிவிக்க முடியாது.
சாட்சியங்களை சரியாக பரிசீலித்து சரியான தீர்ப்பையே பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கியிருந்தது.
தற்போது கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழுவதுமாக வாசித்து எனது கருத்துகளை கர்நாடக அரசுக்கு நான் தெரிவிப்பேன்.
ஏப்ரல் 22-ம் தேதியே இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக நான் நியமிக்கப்பட்டேன். இந்த வழக்கில் எழுத்துபூர்வ வாதத்தை தாக்கல் செய்ய ஒரு நாள் மட்டுமே அவகாசம் தரப்பட்டது.
இதனால் அரசு தரப்புக்கு வாய்மொழி வாதத்துக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இதனால் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியை அரசு தரப்பு தனது வாதத்தால் சமரசம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது" என்றார் அவர்.
பிந்தையச் செய்தி:
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யுமா அல்லது இத்துடன் இந்த வழக்கு முற்றுப் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜரான ஆச்சார்யா ‘தி இந்து'வுக்கு சிறப்பு பேட்டியளித்தார்.முழுமையான பேட்டி: >ஒருதலைபட்சமான விசாரணை, தீர்ப்பு: அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து
Updated: May 12, 2015 | 15.22 IST