நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குடும்பத்தினரை முன்னாள் பிரதமர் நேருவின் ஆட்சியில் வேவு பார்த்தது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
இது குறித்து அவர் கூறும்போது, "நேதாஜி இந்தியர்களால் போற்றப்பட்டவர். அவரது குடும்பத்தினரின் சுதந்திரத்தில் தலையிட்டு, அவர்கள் எங்கே செல்கின்றனர்? என்ன செய்கின்றனர்? என்பதையெல்லாம் 20 ஆண்டு காலமாக வேவு பார்த்தது வேதனை அளிப்பதாக உள்ளது. இது குறித்து நான் பிரதமர் மோடியுடனும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனும் பேச உள்ளேன்.
இதற்கு யார் காரணம் என்பதன் உண்மை தெரிந்தாக வேண்டும்" என்றார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குடும்பத்தினரையும் அவரது உறவினர்களையும் அப்போதைய பிரதமர் நேரு தலைமையிலான அரசு வேவு பார்த்துள்ளதாக அதற்கான மத்திய உளவுத் துறையின் ஆவணங்கள் வெளியானது.
நேருவின் உத்தரவின்பேரில் கொல்கத்தாவில் வசித்த நேதாஜி யின் குடும்பத்தினரை 1948 முதல் 1968 வரை உளவுத் துறை கண்காணித்துள்ளது. அதற்கு பின்பு வந்த காங்கிரஸ் அரசுகளும் நேதாஜியின் குடும்பத்தினரை வேவு பார்த்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.