இந்தியா

திருமலையில் வேற்று மத பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை: மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா எச்சரிக்கை

செய்திப்பிரிவு

ஏழுமலையானை தரிசிப்பதற்காக மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா நேற்று காலை திருமலைக்கு வந்தார். தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்று, தரிசன ஏற்பாடுகளை செய்தனர். அதன் பிறகு ரங்க நாயக மண்டபத்தில் அவருக்கு பட்டு வஸ்திரங்களும் தீர்த்த பிரசாதங்களும் வழங்கி கவுரவிக்க பட்டன.

இதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வெளியே மத்திய அமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

திருமலை-திருப்பதி தேவஸ்தான இடங்களில் வேற்று மதப் பிரச்சாரம் செய்ய முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதையும் மீறி சிலர் அவ்வப்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது இந்து மதத்தையும் இந்து மக்களின் மனதையும் புண்படுத்தும் செயலாகும். எனவே, இனி வேற்று மத பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும், சேஷாசலம் வனப்பகுதியிலிருந்து செம்மரம் கடத்துவோர் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடத்தல்காரர்களின் சொத்துகள் முடக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT