இந்தியா

ஆக்ராவில் தேவாலயம் மீது தாக்குதல்: சிலைகள் சேதம்

பிடிஐ

ஆக்ராவில் தேவாலயம் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் தேவாலயத்தில் இருந்த சிலைகள் சேதமடைந்தததால் அப்பகுதி வாழ் கிறிஸ்தவர்கள் கொந்தளித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, "ஆக்ரா பிரதாப்புரா கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள புனித மேரி தேவாலயத்துக்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை புகுந்த சில விஷமிகள் தேவாலயத்துக்கு சேதம் விளைவித்துள்ளனர்.

அங்கிருந்த 2 சிலைகளை சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக ராகாப்கஞ்ச் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்" என தெரிவித்தனர்.

தேவாலயம் தாக்கப்பட்டதால் வெகுண்டெழுந்த அப்பகுதி கிறிஸ்தவர்கள் விரைவில் குற்றவாளிகளை பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு முந்தைய சம்பவங்கள்:

14 ஜனவரி, 2015: மேற்கு டெல்லி விசாகபுரியில் உள்ள தேவாலயம் மீது 2 நபர்கள் தாக்குதல் நடத்தினர்.

04 ஜனவரி, 2015: டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடில் தீக்கிரையாக்கப்பட்டது.

07 டிசம்பர், 2014: ஜஸோலா பகுதியில் சைரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயத்தின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

02 டிசம்பர், 2014: தில்ஷத் கார்டன் பகுதியில் உள்ள புனித செபாஸ்டின் தேவாலயம் தாக்கப்பட்டது.

SCROLL FOR NEXT