இந்தியா

பவானி சிங் நியமன வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

செய்திப்பிரிவு

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர் பவானி சிங் நியமனத்துக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

பவானி சிங்கின் நியமனத்தை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த 15-ம் தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.

நீதிபதி மதன் பி.லோகுர், ‘பவானிசிங் நியமனம் செல்லாது' என்றும் மற்றொரு நீதிபதி பானுமதி, ‘பவானிசிங் நியம‌னம் செல்லும்' என்றும் தீர்ப்பு அளித் தனர். இதைத் தொடர்ந்து பெரிய அமர்வு விசாரிக்க நீதிபதிகள் பரிந்துரைத்தனர். இதன்படி இந்த மனு மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே. அகர்வால், பிரபுல்ல சி. பாண்ட் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை விசாரிக்கிறது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க மே 12-ம் தேதி வரை காலஅவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜெயலலிதாவின் ஜாமீனும் மே 12-ம் தேதி வரை நீட்டிக் கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT