இந்தியா

சிபிஐ அதிகாரிகள் மீது சரமாரி தாக்குதல்

பிடிஐ

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது, சக வருமான வரித்துறை அலுவலர்கள் சிபிஐ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

இதுதொடர்பாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

லக்னோவில் வருமான வரித்துறை அதிகாரி நிரஞ்சன் குமார் என்பவர், 2011-12-ம் நிதியாண்டுக்கான வரி கணக்கீடு தொடர்பாக ஒருவரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அதில் முதல் தவணையாக ரூ. 2 லட்சம் வாங்கினார். அப்போது, சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி அவரைப் பிடித்து கைது செய்தனர்.

உடனடியாக, வருமான வரித்துறை அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் அங்கு வந்து, சிபிஐ குழுவினர் மீது தீயணைப்புக் கருவி உள்ளிட்டவற்றால் தாக்குதல் நடத்தினர். இதில், சிபிஐ இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட இரண்டுபேர் படுகாயமடைந்தனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறையில் புகார் செய்யப் பட்டுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT