‘காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியைக் காணவில்லை’ என்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பே கடந்த மாதம் முதல் வாரத்தில், ராகுல் காந்தி விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றார். அவர் எங்கு சென்றார், எங்கு தங்கியுள்ளார் போன்ற தகவல்கள் எதையும் காங்கிரஸ் மேலிடம் தெரிவிக்கவில்லை. அவர் ஓய்வெடுக்கச் சென்றுள்ளார் என்று மட்டும் கூறியது. சில வாரங்கள் கழிந்த நிலையில், ராகுல் காந்தி தனது விடுப்பை நீட்டித்துள்ளார் என்று காங்கிரஸ் கூறியது.
இந்நிலையில், ‘காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியைக் காணவில்லை’ என்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் சில மாவட்டங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அலகாபாத், புலந்த்ஷாகர் ஆகிய மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், ‘நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும் முக்கிய நேரத்தில், ராகுல் விடுப்பில் செல்ல முடிவெடுத்தது, அவருக்கு நாட்டைப் பற்றி கவலையில்லை என்பதையே காட்டுகிறது’ என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சில இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில், ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் 10 முக்கிய பிரச்சினைகள் இடம் பெற்றுள்ளன. அமேதியில் தலைவர் இல்லை, அதனால் வளர்ச்சி இல்லை, சாலைகள் மோசம், விவசாயிகள், மாணவர்களுக்கு பிரச்சினைகள், சுகாதார வசதிகள் மோசம் போன்ற பிரச்சினைகள் பட்டியலில் கூறப்பட்டுள்ளன.
ஒரு சுவரொட்டியில், ‘நீங்கள் எங்கே சென்றிருக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஒரு தகவலும் இல்லை, ஒரு கடிதமும் இல்லை., எங்கே போனீர்கள்?’ இப்படிக்கு அமேதி மக்களவைத் தொகுதி பொதுமக்கள் என்று உள்ளது.
காங்கிரஸ் கடும் கண்டனம்
உ.பி.யில் இந்த சுவரொட்டிகளை ஒட்டியது பாஜக.வின் வேலைதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சாக்கோ நேற்று கூறும்போது, “இது பாஜகவின் வேலைதான். தாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று அமேதி தொகுதி மக்கள் நினைக்கின்றனர். தங்கள் தொகுதிதான் மிகவும் சிறந்தது என்று அவர்கள் உணர்ந் திருக்கிறார்கள். அமேதி தொகுதி யில் ஏற்பட்டுள்ள முழு வளர்ச்சி யும் ராகுல் காந்தியின் யோசனைப் படிதான் நடந்தது. ஆனால், காண வில்லை சுவரொட்டி மூலம் அவதூறு பரப்ப பாஜக முயற்சிக் கிறது. ராகுலுக்கு எதிராக அவதூறு பரப்ப சுவரொட்டிகளை ஒட்டியுள் ளது. அதை நாங்கள் எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி சந்திப்போம்” என்றார்.