ஆட்டோவில் பயணிகள் தவறவிட்ட 15 சவரன் நகைகளை போலீஸில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை பொதுமக்கள் பாராட்டினர்.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், ஓங்கோல் அருகே உள்ள கண்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அலுமேலு மங்கம்மாள். இவரும் இவரது உறவினர்கள் 2 பேரும் நெல்லூரில் நடைபெறும் உறவினர் திருமண விழாவுக்குப் புறப்பட்டனர். இவர்கள் ஆட்டோ ஒன்றில் ஏறி, கண்டபாளையம் ரயில் நிலையம் அருகே இறங்கும்போது, 15 சவரன் நகை உள்ள பையை ஆட்டோவில் தவறவிட்டனர்.
சிறிது நேரம் கழித்து இந்தப் பையை பார்த்த ஆட்டோ ஓட்டுநர் கோடீஸ்வரன், ரயில் நிலையம் சென்று அவர்களை தேடியுள்ளார். பின்னர் அங்கிருந்த புறநகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் பையை ஒப்படைத்தார்.
சிறிது நேரத்தில் பையை காணவில்லை என அலுமேலு மங்கம்மாள் அதே காவல் நிலையத்துக்கு வந்தார். போலீஸார் விசாரணை நடத்தி அவரிடம் நகைகளை ஒப்படைத்தனர்.
மேலும் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை போலீஸாரும், பொதுமக்களும் பாராட்டினர். ஓட்டுநருக்கு அலுமேலு மங்கம்மாள் ரூ. 1,000 பரிசு கொடுத்து பாராட்டினார்.