மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டத்திலிருந்து பாதியிலேயே கிளம்பி திருமணத்துக்குச் சென்றார் முதல்வர் பட்னாவிஸ்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது பாஜக எம்.பி. வீட்டு திருமணத்திற்காகக் கிளம்பிச் சென்ற அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களைத் தொடுத்துள்ளனர்.
நேற்று அவர் பாதியிலேயே அவையிலிருந்து விடைபெற்று நாக்பூரில் பாஜக எம்.பி. வீட்டுத் திருமணத்துக்குச் சென்றுள்ளார்.
இதனை கடுமையாக விமர்சித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தனஞ்ஜய் முண்டே, “கூட்டத்தொடரிலிருந்து பாதியிலேயே கிளம்பிச் சென்றதன் மூலம் மாநில முதல்வர் விவசாயிகளை அவமானப்படுத்தியுள்ளார். விவசாயிகளின் பிரச்சினையை விட பணக்கார தொழிலதிபர் பாஜக எம்.பி. வீட்டுத் திருமணமே அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.” என்றார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் பருவநிலை தவறி பெய்யும் மழையால் பயிர்கள் பாதிப்படைந்து லட்சக்கணக்கான விவசாயிகள் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் வேளையில் சட்டப்பேரவையில் இது பற்றிய விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போதுதான் முதல்வர் பட்னாவிஸ் கிளம்பிச் சென்றுள்ளார்.
"இங்கு சூழ்நிலை மோசமானதிலிருந்து மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. இப்படிப்பட்ட தருணத்தில் திருமணத்தில் பங்கேற்பதுதான் முதல்வருக்கு முக்கியம் என்றால் இது விவசாயிகள் மீது அவர் வைத்திருக்கும் மரியாதையைக் காட்டுவதாக உள்ளது." என்று கண்டித்துள்ளார் தனஞ்ஜய் முண்டே