இந்தியா

ஜம்முவில் காவல் நிலையம் மீது தாக்குதல்: சி.ஆர்.பி.எப். வீரர்கள் மூவர் உட்பட 6 பேர் பலி

செய்திப்பிரிவு

ஜம்முவில் கத்துவா மாவட்டத்தில் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவலர் ஒருவர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். சி.ஆர்.பி.எப். வீரர்கள் 7 பேர் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் பாஜக-மஜக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு நடந்த முதல் தீவிரவாத தாக்குதல் இதுவாகும்.

இன்று காலை முதல் நடந்து வந்த தீவிரவாதிகளுடனான சண்டை முடிவுற்ற நிலையில் ஜம்மு-காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி. கே.ராஜேந்திரா 'தி இந்து' விடம் கூறியதாவது: தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டை முடிந்தது. காவல் நிலைய சென்ட்ரி, சி.ஆர்.பி.எப். வீரர்கள் இருவர், பொதுமக்களில் ஒருவர், தீவிரவாதிகள் இருவர் என 6 பேர் பலியாகினர். இப்போது, காவல் நிலையப் பகுதியை துப்புரவு செய்யும் பணி நடந்து வருகிறது" என்றார்.

முன்னதாக துப்பாக்கிச் சண்டை குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, "கத்துவா மாவட்டத்தில் உள்ளது ராஜ்பாக் காவல் நிலையம். இக்காவல் நிலையத்துக்குள் இன்று காலை அதிரடியாக நுழைந்த தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் அனைவரும் ராணுவ உடை அணிந்திருந்ததால் ஆரம்ப நிலையில் காவல் நிலையத்தில் இருந்த வீரர்கள் குழப்பமடைந்துள்ளனர். முதலில் காவல் நிலைய வாயிலில் இருந்த காவலரை சுட்டுக் கொன்றுள்ளனர். பின்னர் நடந்த சண்டையில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவரும், பொதுமக்களில் ஒருவரும் பலியாகியுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு - பதான்கோட் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு-காஷ்மீர் டி.ஜி.பி-யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரத்தை கேட்டறிந்தார்" என்றார்.

துணை முதல்வர் தகவல்:

இச்சம்பவம் குறித்து துணை முதல்வர் நிர்மல் சிங் கூறும்போது, "கத்துவா மாவட்டத்தில் காவல் நிலையத்தின்மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காவலர் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். கூடுதல் படைகள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் சம்பவம் குறித்து காஷ்மீர் டி.ஜி.பி.யிடம் தகவல்களை கேட்டறிந்தார். ஜம்மு - பதான்கோட் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது" என்றார்.

ஒமர் அப்துல்லா ட்விட்டரில் கருத்து:

கடந்த முறைகளில் நடந்தது போன்றே, இந்த பிதாயின்கள் (ராணுவ உடையணிந்த தீவிரவாதிகள்) எல்லை தாண்டி வந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். காவல் நிலையப் பகுதியில் தீவிரவாதிகளை எதிர்கொண்டுள்ள வீரர்களின் துணிச்சலை பாராட்டுகிறேன்" என காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

          
SCROLL FOR NEXT