‘வீரமிகு இந்து’ மாநாட்டில் தடையை மீறி, வீடியோ மூலம் பேசிய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீண் தொகாடியா மீது பெங்களூரு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 8-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற வீரமிகு இந்து மாநாட்டில் பிரவீண் தொகாடியா சிறப்புரையாற்ற திட்டமிட்டிருந்தார். சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதால், பிரவீண் தொகாடியா 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை பெங்களூருவுக்குள் நுழைய பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி தடை விதித்தார்.
அதனை மீறி நேரிலோ, வீடியோ மூலமோ பேசினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணை பிறப்பித்தார்.
தடை மீறிய தொகாடியா
இதையடுத்து, கடந்த சனிக்கிழமை தொகாடியா போலீஸாரின் தடையை மீறி பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அவரை அனுமதிக்க மறுத்த போலீஸார், ஓசூரில் கொண்டுபோய் விட்டனர்.
இதனிடையே, ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற மாநாட்டில் தொகாடியாவின் பேச்சு அடங்கிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அரை மணி நேரத்தில் போலீஸார் அதனை நிறுத்தினர். இதையடுத்து தொகாடியாவின் மாநாட்டு உரை அடங்கிய சிடியை இந்துத்துவா தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது.
3 பிரிவுகளில் வழக்கு பதிவு
இதையடுத்து, தடையை மீறி மாநாட்டில் உரையாற்றியதால் பிரவீண் தொகாடியா மீது இந்திய தண்டனை சட்டம் 188-ம் பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதே போல மாநாட்டை ஏற்பாடு செய்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த 3 நிர்வாகிகள் மீது இந்திய தண்டனை சட்டம் 144 மற்றும் 188 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பிரவீண் தொகாடியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவரை கைது செய்து விசாரிக்க பெங்களூரு போலீஸார் திட்டமிட் டுள்ளனர். முன்னதாக பிரச்சினை களை தவிர்க்கும் வகையில் இந்துத் துவா அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களை கண்காணித்து வரு கின்றனர். இது தவிர இந்துத்துவா தலைவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஏதேனும் சட்டசிக்கல் ஏற்படுமா? என சட்ட நிபுணர்களிடம் போலீஸார் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.