டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆட்சி அமைக்கவிருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால் தனது அமைச்சரவையில் புதிய முகங் களுக்கும் வாய்ப்பளிக்க உள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி, காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் டெல்லி முதல்வராக கேஜ்ரிவால் பதவியேற்றார். அவருடன் 6 அமைச்சர்கள் பதவியேற்றனர். லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனதால் 49 நாள் ஆட்சிக்குப் பின் 2014, பிப்ரவரி 14-ம் தேதி கேஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் அதே பிப்ரவரி 14-ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் கடந்தமுறை அமைச்சரவையில் இடம்பெற்ற 6 பேருடன் புதிய உறுப்பினர்கள் சிலரையும் சேர்க்க உள்ளார்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கூறும்போது, “எங்கள் வாக்குறுதி களில் ஒன்றான டெல்லியில் ‘வைபை’ வசதி அளிப்பதற்கு ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி ஆதர்ஷ் சாஸ்திரி உட்பட புதியவர்கள் சிலரை அமைச்சரவையில் சேர்ப்பது குறித்து யோசித்து வருகிறோம். அமைச்சர்களுக்கு ஆலோசனை கூறும் வகையில் கட்சியிலும், வெளியிலும் அனுபவம் நிறைந்தவர் களைக் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட உள்ளது” என்றனர்.
கடந்த முறை, தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றவர்களை அமைச்சரவையில் கேஜ்ரிவால் சேர்த்திருந்தார். முன்னாள் பத்திரிகையாளர் மணிஷ் சிசோதியா, சமூக சேவகி ராக்கி பிர்லா, வழக்கறிஞர்களான சோம்நாத் பாரதி, சௌரப் பரத் வாஜ், தொழிலதிபர் கிரிஷ் சோனி, கட்டிடக்கலை நிபுணர் சத்யந்தர் ஜெயின் ஆகியோர் அமைச் சரவையில் இடம் பெற்றிருந்தனர்.