வருமான வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், வரி ஏய்ப்பு தொடர்பான தீவிர வழக்குகள் இனி குற்றச் சட்டத்தின் அடிப்படையில் விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'வருமான வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த தண்டனை வருமான வரி சட்டம் 1961 கீழ் உள்ள பிரிவு 276சி-ன் படி விதிக்கப்படும்.
இந்த நிதி ஆண்டில் டிசம்பர் மாதம் வரை 628 வழக்குக்கான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 56 குற்றச்சாட்டு புகார்கள் வெளிநாட்டு வருவாய் தொடர்பானவை.
வருமான வரி துறை விசாரணை இதுவரை சிவில் சட்டத்தின் அடிப்படையில் நடந்தது. ஆனால், இனி வரி ஏய்ப்பு தொடர்பான தீவிர வழக்குகள் குற்றச் சட்டத்தின் அடிப்படையில் விசாரிக்கப்படும்.
இந்த நிதியாண்டில் டிசம்பர் மாதம் வரை ரூ.582 கோடி மதிப்பிலான வெளியிடப்படாத சொத்துக்களை வருமானத்துறை பறிமுதல் செய்துள்ளது. இதுவரை 414 நிறுவனங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இது போன்ற சோதனையின்போது, வரி செலுத்துபவர்கள் ரூ.6769 கோடி மதிப்பிலான வருமானத்தை வெளிபடுத்தவில்லை என்று ஒப்புக்கொண்டுள்ளனர்' என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.