ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ‘லெஜண்ட்ஸ் அண்ட் பெர்சனாலிட்டிஸ் ஆஃப் ஜம்மு அண்ட் காஷ்மீர்’ என்ற புத்தகம் சமீபத்தில் வெளியானது. தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளைப் பெருமைப்படுத்தும் வகையிலும், தீவிரவாத சித்தாந்தங்களை நியாயப்படுத்தும் வகையிலும் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த புத்தகத்தை அச்சிட்டு புழக்கத்தில் விட்டது தொடர்பாக மூன்று பதிப்பாளர்களை ஜம்முவின் உளவுத்துறை பிரிவு (சிஐஜெ) கைது செய்துள்ளது. கைதானவர்களில் இருவர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் ஜம்முவைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. இந்த மூன்று பதிப்பாளர்களும், காவலில் எடுக்கப்படுவதற்கு முன்பு விசாரணைக்காக வரவழைக்கப்பட்டனர்.
டெல்லியைச் சேர்ந்த பதிப்பாளர்களில் ஒருவர், இந்த வெளியீடு தொடர்பான டிஜிட்டல் ஆவணங்களை அழித்து ஆதாரங்களை மறைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், விசாரணையின்போது புலனாய்வாளர்கள் முக்கியத் தரவுகளை மீட்டெடுத்தனர்.
டெல்லி மற்றும் ஜம்முவில் உள்ள பதிப்பகங்களில் சிஐஜெ குழுக்கள் சோதனை நடத்தி, புத்தகத்தின் அச்சிடுதல், விநியோகம் மற்றும் சப்ளை தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றிய சில நாட்களிலேயே இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, புத்தகத்தின் ஆசிரியர்களில் ஒருவரான சந்தோஷ் மீனா என்பவரிடம் விசாரணை நடத்துவதற்காக சிஐஜெ குழு ராஜஸ்தான் சென்றுள்ளது. மற்றொரு ஆசிரியரான ஹிலால் அகமது என்பவரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக கல்வித் துறையைச் சேர்ந்த 8 அதிகாரிகள் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த புத்தகத்தை வெளியிடுதல், அச்சிடுதல் மற்றும் விளம்பரப்படுத்துதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
சையத் அலி ஷா கிலானி, மஸ்ரத் ஆலம் மற்றும் மிர்வைஸ் உமர் ஃபரூக் உள்ளிட்ட பிரிவினைவாதிகளை ஜம்மு காஷ்மீரின் ‘சிறந்த ஆளுமைகள்’ என்று இந்த புத்தகம் விவரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.