கேரளத்தில் உள்ள பார்கள் செயல்படு வதற்கு அனுமதி தர, நிதி அமைச்சருக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புதிய ஆடியோ ஆதாரம் ஒன்று வெளி யாகியுள்ளது. இந்த ஆதாரத்தை பார் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பிஜு ரமேஷ் வெளியிட்டார்.
அந்த ஆடியோவில், ரமேஷுக்கு நெருக்கமான சிலர் நிதி அமைச்சர் கே.எம்.மணிக்கு லஞ்சம் கொடுத்ததாக, கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நடந்த சங்கக் கூட்டத்தில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அந்த ஆடியோவில் பேசிய ஒருவர், சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் அனிமோன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர், எந்த தேதி என்பதைக் குறிப்பிடாமல், தான் ரூ.5 கோடியை எடுத்துக்கொண்டு அதிகாலை 1 மணி அளவில் நிதி அமைச்சரின் வீட்டுக்குச் சென்றதாகக் கூறுகிறார். அவரிடத்தில் 'அடுத்த நாள் ரூ.2 கோடி கொண்டு வரவேண்டும்' என்று மணி கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை சில நாட்கள் கழித்து நெடும்பசேரியில் மணியிடம் வழங்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
22 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த ஆடியோவில், ஏற்கெனவே மூடப்பட்ட 418 பார்களை மீண்டும் திறக்காமல் இருக்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.30 கோடி லஞ்சம் தர வேண்டும் என்று நிதி அமைச்சர் கூறியதாக பதிவு உள்ளது.
கேரளத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தும் இந்த ஆடியோவில் அனிமோன் கூறியுள்ளதும், விசாரணையின்போது போலீஸில் அவர் அளித்த வாக்குமூலமும் முரண்படுகின்றன என்று கூறப்படுவதும் கவனிக்கத்தக்கது.