புதுடெல்லி: தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையை உடைக்க காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாக ஓய்வுபெற்ற நீதிபதிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 272 முக்கிய பிரமுகர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஓய்வுபெற்ற 16 நீதிபதிகள், 123 அரசு உயர் அதிகாரிகள், 133 ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 272 முக்கிய பிரமுகர்கள் 'தேசிய அரசியல் சாசன அமைப்புகள் மீதான தாக்குதல்' என்ற தலைப்பில் திறந்த மடல் எழுதி உள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது: சில அரசியல் தலைவர்கள், நேர்மையான மாற்று கொள்கைகளை முன்வைப்பதற்கு பதில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் நாடகம் நடத்துகிறார்கள். அவர்கள் இந்திய பாதுகாப்புப் படையினரின் வீரத்தையும் சாதனைகளையும் சந்தேகிக்கின்றனர்.
நீதித் துறையின் செயல் பாட்டையும் சந்தேகிக்கின்றனர். நாடாளுமன்றத்தையும் அதன் அதிகாரிகளையும் குறை கூறுகின்றனர். இப்போது அதேமுறையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் நேர்மை கண்ணியத்தின் மீது குறை கூறுகிறார்கள்.
குறிப்பாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) என்ற பெயரில் தேர்தல் ஆணையம் தொடர்ந்து வாக்குகளை திருடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். தேர்தல் ஆணையத்துக்கு எதிராக 100% ஆதாரம் இருக்கிறது என்றும் ஹைட்ரஜன் குண்டு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், அதற்கு உரிய ஆதாரங்களை அவர் வழங்கவில்லை.
காங்கிரஸ் கட்சியின் பிற தலைவர்கள், பிற எதிர்க்கட்சித் தலைவர்கள், சில தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவையும் இதே மாதிரியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. ஆனால் இவை அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் நடைமுறையை வெளிப்படையாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் நீதிமன்ற உத்தரவின்படி இந்த பணி நடைபெறுவது தெரிகிறது. தகுதியற்ற பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, தகுதியுடைய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து தேர்தலில் தோல்வி அடையும் அரசியல் கட்சிகள் விரக்தியடைந்து இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. தேர்தல் ஆணையம் தனது வெளிப்படைத் தன்மையை தொடர வேண்டும். அதேநேரம், அரசியல் சாசன அமைப்புகளின் செயல்முறையை அரசியல் கட்சித் தலைவர்கள் மதிக்க வேண்டும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது. ஜனநாயக தீர்ப்பை ஏற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.