மத்திய நிதியமைச்சரும், செய்தி-ஒலிபரப்புத் துறை அமைச்சருமான அருண் ஜேட்லியை அதிமுக எம்.பி.க்கள் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர்.
அப்போது, தமிழக அரசு கேபிள் டிவி.க்கு டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையிலான அதிமுக எம்.பி.க்கள், அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து பேசினர். அவர்களுடன் தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் சென்றார்.
தமிழக அரசு கேபிள் டி.வி.க்கு டிஜிட்டல் உரிமத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று அமைச்சரிடம் அதிமுக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எழுதிய கடிதத்தையும் அமைச்சரிடம் அவர்கள் அளித்தனர்.
அந்தக் கடிதத்தில், தமிழக அரசு கேபிள் டி.வி.க்கு டிஜிட்டல் உரிமம் கோரி விண்ணப்பித்து 2 ஆண்டுகளாகியும் இன்னும் வழங்கப்படவில்லை. இனிமேலும் தாமதிக்காமல் உரிமத்தை உடனடியாக வழங்க வேண்டும். இதன்மூலம் ஏழைகளுக்கு குறைந்தவிலையில் தரமான கேபிள் சேவையை வழங்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.