ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக ஒருவரை பிடித்துள்ளதாக பெங்களூரு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவில் பணிபுரியும் ஐ.டி. நிறுவன ஊழியர் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்காக ட்விட்டர் மூலம் ஆள் சேர்ப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பெங்களூரு தனிப் படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரை பிடித்துள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவர் கைது செய்யப்பட்டாரா. அவர் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது போன்ற தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இன்று மதியம் 1 மணியளவில், பெங்களூரு காவல்துறை ஆணையர் எம்.என்.ரெட்டி, இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரில் ஆள் சேர்ப்பு:
பெங்களூருவில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் மேக்தி, @shamiwitness என்ற ட்விட்டர் பக்கத்தை வைத்திருக் கிறார். ஐஎஸ் அமைப்பின் தீவிர ஆதரவாளரான இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த அமைப்புக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்துள்ளார். இதன் மூலம் பல நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கானவர்களை மூளைச் சலவை செய்துள்ளார்.
மேக்தி தனது ட்விட்டர் பக்கத் தில் தினமும் காலை, மாலை என 2 முதல் 5 முறை கருத்துகளை பதிவிடுவார். அவரது ட்விட்டர் பக்கத்தை 17,700 பேர் பின்பற்றியுள்ளனர். இதில் 3-ல் 2 பங்கு பேர் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் நம்பிக்கை உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது. சிலர் அந்த அமைப்புக்காக பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது.