கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 252 மதரஸாக்களை மூட உத்தரவிட்டுள்ள அரசு மேலும் 100 மதரஸாக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் இஸ்லாமிய மதக் கல்வி மற்றும் பொதுக்கல்வியை கற்பிக்கும் மதரஸாக்கள் ஆயிரக்கணக்கில் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை முறையாக அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனையடுத்து, மேற்குவங்கம் முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களின் எண்ணிக்கையை தீர்மானிப்பதற்காக, மாநிலம் தழுவிய கணக்கெடுப்பு நடத்த முதல்வர் சுவேந்து அதிகாரி கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, மதரஸா நிர்வாக அமைப்புகள், மாணவர் அமைப்புச் சேர்க்கை, நிதி ஆதாரங்கள் மற்றும் பதிவு நிலை ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக, சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் மதரஸா கல்வித் துறையால் மாநிலம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதுகுறித்து சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் குதிராம் துடு கூறும்போது, “கண்டறியப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், முதல் கட்டமாக 252 மதரஸாக்களை மூட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மேலும், கடுமையான முறைகேடுகள் கண்டறியப்பட்ட மற்ற 100 மதரஸாக்களுக்கு விளக்கம் கோரும் அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கல்வி நிறுவனங்கள் ஆதாரம் அல்லது முறையான அங்கீகாரத்தை வழங்கத் தவறினால், அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மேற்கு வங்கத்தில் 2,132 மதரஸாக்கள் முறையான அனுமதியுடன் இயங்கி வருகின்றன, அதே நேரத்தில் அனுமதி பெறாத மதரஸாக்களின் எண்ணிக்கை 2,396 ஆக உள்ளது” என்றார்.