தமிழக தொழிலாளர்கள் மீது ஆந்திர வனத் துறையினர் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியது தொடர்பாக விளக்கம் கேட்டு அம்மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து ஆந்திராவில் கூலி வேலைக்குச் சென்ற சில தொழிலாளர்களை அந்த மாநிலத்தின் வனத்துறை அதிகாரிகள் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ காட்சி கடந்த வாரம் வெளியானது. இந்த வீடியோ காட்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்தது. இது குறித்த தகவல் தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்துக்குச் சென்றது. இதுகுறித்து ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநரிடம் விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமை ஆணைய நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நோட்டீசுக்கு 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், மரக்கடத்தல் கும்பல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.