மத்திய பட்ஜெட்டில் வரி உயர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து வெள்ளி (ஜூலை 5) நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது.
நாடாளு மன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 'மத்திய பட்ஜெட்'டை தாக்கல் செய்தார். அதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ரூ.1 அதிகரிக்கப்படுவதாக அறிவித்தார். இதன் காரணமாக இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கான விலை உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.50 காசும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.30 காசும் உயர உள்ளது. உயர்த்தப்பட்ட வரியுடன் உள்ளூர் வரியும் கூடுதலாக இணையும் என்பதால் நாட்டில் வெவ்வேறு இடங்களில் விலையில் மாறுபாடு இருக்கும்.
இந்த விலை உயர்வு இன்று (ஜூலை 5) நள்ளிரவு முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெட்ரோல், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.2 கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை என்பது அனைத்துப் பொருட்களின் விலைகளையும் தீர்மானிப்பதாகும் இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்ற பொருட்களின் விலை அதிகரிப்பையும் தீர்மானிக்கும் என்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அரசியல் கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.