இந்தியா

காவிரி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா விவசாயிகள் பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலை முற்றுகை

செய்திப்பிரிவு

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் இன்று பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து மாண்டியா மாவட்ட ஏஎஸ்பி பி.என்.என். லாவண்யா கூறுகையில், "கே.ஆர்.எஸ் அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்கிட கர்நாடக விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் இன்று பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலை போக்குவரத்து சில மணிநேரங்கள் பாதிக்கப்பட்டது.

கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதாக குற்றம் சாட்டிய விவசாயிகள், அதற்குப் பதிலாக கே.ஆர்.எஸ் அணையின் சேமிப்பு அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையும் வைத்து காஜாலாகெரெ மற்றும் இட்லவாலா கிராமங்களின் நெடுஞ்சாலைகளில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்'' என்றார்.

காவிரி நீரவாரி நிகாம் லிமிடெட்டின் நிர்வாகப் பொறியாளர் கே.பசவராஜே கௌடா கூறுகையில், இன்று (ஜூலை 2) கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 2,000 கனஅடி நீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த ஜூன் 29 அன்று இரவில், 3,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. கர்நாடக நீர்வளத்தை தமிழகத்திற்கு தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 30 அன்று கர்நாடக அரசியல் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் காவிரி ஆற்றங்கரையின் குளிக்கும் படித்துறைகளில் இறங்குவதன் மூலம் தங்கள் எதிர்ப்புகளை நடத்தினர்.

SCROLL FOR NEXT