மேற்கு வங்க மாநிலத்தில் பசீர்ஹத் பகுதியில் மதக் கலவரம் என்று கூறி 2002-ம் ஆண்டு குஜராத் கலவர புகைப்படங்களை சமூக வலைதளங்களில் டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் நிபுர் சர்மா பதிவிட்டது தற்போது தெரியவந்துள்ளது.
டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளரான நிபுர் சர்மா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தூக்கமில்லா இரவுகளைக் கொடுத்துள்ள பசீர்ஹத் வன்முறை காட்சிகளை ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார். மேலும் அவர், ‘இது டெல்லி மக்களை தட்டி எழுப்பும் எனத் தெரிவித்து உள்ளார்.
ஆனால் அந்த ட்விட்டரில் அவர் பதிவிட்ட புகைப்படம் கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில் எடுக்கப்பட்ட படம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து தவறான தகவலை வெளியிட்டு “வதந்தியைத் பரப்பும் செயலில் ஈடுபட்ட நிபு சர்மாவை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதுதொடர்பாக ட்விட்டரில் டெல்லி போலீஸாருக்கு ஏராளமான புகார்களையும் பலர் அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் இதுபற்றி நிபுர் சர்மா எந்தக் கவலையும் இல்லாமல் இதனைத் திசை திருப்பும் வகையில் பேசியுள்ளார். ‘வன்முறை தொடர்பாக சம்பந்தம் இல்லாத புகைப்படம் வெளியானதைப் பற்றி பலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் மேற்கு வங்கத்தில் ஏன் கலவரம் ஏற்பட்டது. சிறு பான்மையினரைத் திருப்தி படுத்தும் நிகழ்வுகள் அங்கு நடைபெற்றன’ எனக் கூறியுள்ளார்.