டார்ஜிலிங்கில் 25-வது நாளாகப் போராட்டம் தொடரும் நிலையில் சிக்கிம் மாநிலத்தை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் (என்.எச். 10) பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்துக்கு மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கின் மலைப் பகுதிகளை ஒருங்கிணைத்து கூர்க்காலாந்து தனி மாநிலம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் (ஜிஜேஎம்) நடத்தி வரும் போராட்டம் நேற்றுடன் 25-வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் டார்ஜிலிங்கின் சோனாடா பகுதியில் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் தாஷி பூட்டியா, சுராஜ் சுந்தாஸ், அஸ்கா குமார், சமீர் சுபா ஆகிய 4 பேர் உயிரிழந்ததாக ஜிஜேஎம் அமைப்பினர் குற்றம்சாட்டினர்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை போலீஸார் மறுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையில் போலீஸ் சோதனைச் சாவடி, ரயில் நிலையத்துக்குத் தீ வைக்கப்பட்டது. இதனால் அங்கு ராணுவத்தினர் மீண்டும் குவிக்கப்பட்டனர்.
இதனைக் கண்டித்து ஜிஜேஎம் அமைப்பினர் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் இருந்து சிக்கிம் மாநிலத்தின் கேங்டாக் பகுதியை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் (என்.எச்.10) பேரணி மற்றும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச். 10) பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக்கு எந்தவிதத் தொந்தரவும் இல்லாத நிலையை ஏற்படுத்துமாறு மத்திய உள்துறை செயலாளரிடம் கேட்டுக் கொண் டுள்ளேன். நெடுஞ்சாலையில் உரிய பாதுகாப்பை மத்திய அரசு வழங்கும் என சிக்கிம் முதல்வர் பவான் குமார் ஷாம்லிங்கிடம் உறுதி அளித்துள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விடுத்த வேண்டுகோளை ஜிஜேஎம் அமைப்பு நிராகரித்துள்ளது. இதனால் டார்ஜிலிங்கில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.