உத்தரப் பிரதேசத்தில் பல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளின் கட்டணங்களை முதல்வர் யோகி அதித்யநாத் தலைமையிலான அரசு புதன்கிழமை நிர்ணயித்தது.
3 வருடங்களுக்காக அரசு கட்டணத்தை விட அதிகம் பெறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ் படிப்பிற்கான ஐந்து வருடக் கட்டணமாக ரூ.8.50 முதல் 11.50 லட்சம் வரை என கல்லூரிகளின் தரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பல் மருத்துவத்திற்கான கட்டணமாக ரூ.1.37 முதல் 3.65 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கல்விக் கட்டணம் 2017-18, 2018-19 மற்றும் 2019-20 ஆண்டுக்கானதாக இருக்கும் என உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
இதற்குமுன் உபி அரசு ரூ.11.50 லட்சம் மருத்துவக் கல்லூரிகளுக்கும் ரூ.3.25 லட்சம் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கும் என நிர்ணயித்திருந்தது. இதுவும், நடப்பு கல்வியாண்டான 2017-18-க்கு மட்டும் என நிர்ணயித்திருந்தது. ஆனால், அரசு அறிவிப்பை மீறி சில மருத்துவக்கல்லூரிகள் ரூ.21 முதல் 23 லட்சம் வரையும், பல் மருத்துவக்கல்லூரிகள் ரூ.9 முதல் 13 லட்சம் வரையும் வசூலித்ததாகப் புகார் கிளம்பின. இதனால், அதை தற்போது மாற்றி அறிவித்துள்ளது.
இது குறித்து உத்தரப் பிரதேச மாநில கல்வித்துறை அமைச்சர் அசுதோஷ் டண்டண் கூறுகையில், ‘கல்விக்கட்டணம் எனும் பெயரில் நடைபெறும் துன்புறுத்தல்கள் மீது பல புகார்கள் வந்தன. இதனால், எனவெ கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. இதன் நியாயமான பரிந்துரையின் பெயரில் அரசு இந்த கட்டணங்களை நிர்ணயித்து அமலாக்கி உள்ளது.
இதற்கும் அதிகமாக நன்கொடை எனும் பெயரிலும் அரசு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இந்த புதிய கட்டணம் உபியில் அமைந்துள்ள 23 மருத்துவக்கல்லூரிகள் மற்றும் 13 பல் மருத்துவக்கல்லூரிகள் அனைத்திற்கும் பொருந்தும். இந்த அறிவிப்பு உத்தரப் பிரதேச பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.