சித்தூர் மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி அருகே காரில் செம்மரம் கடத்த முயன்ற வெளிநாட்டு கும்பலை நெல்லூர் போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 340 கிலோ செம்மரத்தைப் பறிமுதல் செய்தனர்.
செம்மரம் கடத்தப்படுவதாக நெல்லூர் மாவட்ட எஸ்பி ராமகிருஷ்ணாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளுது. இதன் அடிப்படையில் நெல்லூர் டிஎஸ்பி நிவாசுலு தலைமையில் வெங்கடகிரி - ஸ்ரீகாளஹஸ்தி நெடுஞ்சாலையில் நேற்று தீவிர வாகன சோதனை நடைபெற்றது. அப்போது வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் 340 கிலோ எடையுள்ள 30 செம்மரங்கள் சென்னைக்கு கடத்தப்பட இருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக 7 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். இவர்கள் சென்னை சர்மா நகரைச் சேர்ந்த திப்பு சுல்தான் பரூக் (34), நேபாளத்தைச் சேர்ந்த சோனம் தோப்காயல் (42), ரேணு பொம்ஜான் (பெண் 37), டெம்பா சைசன் (26) மற்றும் சீனாவைச் சேர்ந்த ஃபுஸ்ஹோ (47) மற்றும் கார் ஓட்டுநர்கள் இருவர் என தெரியவந்தது.
இவர்கள் சேஷாசலம் வனப் பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி, சென்னை, பெங்களூரு, டெல்லி வழியாக வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. மேலும் இவர்களின் கூட்டாளிகள் 7 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.