குல்பூஷன் ஜாதவின் தாயாருக்கு விசா கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சர்தாஜ் அஜீஸுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அக்கடிதத்தை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதலைக்கூட இதுவரை பாகிஸ்தான் தரப்பு தெரிவிக்காத நிலையில், பாக்.கின் இந்த போக்குக்கு சுஷ்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவில் மருத்துவ சேவை பெற விசா கோரி விண்ணப்பிக்கும் அனைத்து பாகிஸ்தானியர்களுக்கும் விசா வழங்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
அதற்கு நாங்கள் எதிர்பார்ப்பது எல்லாம், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் அங்கீகாரம் மட்டுமே. சம்பந்தப்பட்ட நபருக்கு விசா வழங்க பரிந்துரைப்பதாக பாக் வெளியுறவு அமைச்சர் கூறிவிட்டால் உடனடியாக விசா வழங்கிவிடுகிறோம்.
ஆனால், பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷன் ஜாதவின் தாயார் அவந்திகா ஜாதவ் பாகிஸ்தான் விசா கோரியிருந்ததை நான் பரிந்துரைத்து கடிதம் எழுதியும்கூட பாகிஸ்தான் இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை. குறைந்தபட்சமாக அந்தக் கடிதம் கிடைத்ததைக் கூட அங்கீகரித்து ஒப்புதல் வழங்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கடற்படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ். கடந்த 2016 மார்ச் 3-ம் தேதி அவர் ஈரானில் இருந்து பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், மாஸ்கெல் பகுதிக்குச் சென்றார். அங்கு அவரை அந்த நாட்டு உளவுத் துறையினர் கைது செய்தனர். அவர் பாகிஸ்தானுக்கு எதிராக சதி செய்ததாகவும் கராச்சி குண்டுவெடிப்பில் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த ராணுவ மாஜிஸ்திரேட், குல்பூஷண் ஜாதவுக்கு ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.
இதனைத் தொடர்ந்து குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா தரப்பில் முறையிடப்பட்டது.
குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், குல்பூஷன் ஜாதவின் தாயாருக்கு விசா கோரி தான் எழுதிய கடிதத்துக்கு பாகிஸ்தான் பதில் அளிக்காததற்கு சுஷ்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.