வடக்கிழக்கு மாநிலத்தை சேர்ந்த மக்கள் இரண்டாம் தரத்தினர் இல்லை என்றும் இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும் என்று முன்னாள் சபானாயகர் பி.ஏ. சங்மா கூறினார்.
சமீப காலமாக பல்வேறு நகரங்களில் வடக்கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவது குறித்து மக்களவையின் முன்னாள் சபாநாயகரும் மேகாலயா மாநில முன்னாள் முதல்வருமான பி.ஏ.சங்மா கவலைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, "நாங்கள் யாருக்கும் தாழ்ந்தவர்களாக இல்லை. எங்களை இரண்டாம் தர மக்களாக நடத்துவதற்கான காரணம் புரியவில்லை. நாட்டில் நாங்கள் முதல் தர குடிமக்கள் என்று நிரூபித்து வருகிறோம். தொடர்ந்து மேரி கோம் போன்றவர்கள் இங்கிருந்து சாதித்து வருகின்றனர்.
இது போன்ற தாக்குதலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படலாம், ஆனால் வடக்கிழக்கு பகுதி மக்கள் செல்லும் இடங்களில் முன்னோடியாக சாதித்து வருவதே முக்கிய காரணமாகும். வடக்கிழக்கு மக்கள் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வேலைவாய்ப்பு பெற்று உயரிய பதவிகளையும் அடைகின்றனர்" என்றார்.
மேலும், மாணவர்கள் இது போன்ற தாக்குதல்களுக்கு அஞ்சாமல் போட்டிப்போட்டு தங்களது துறைகளில் சாதித்து தற்போது உள்ள நிலவரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.