இந்தியா

மது பார் உரிமையாளர்களிடம் ரூ.5 கோடி லஞ்சம்: கேரள நிதியமைச்சர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவு

பிடிஐ

கேரளத்தில் மது பார்களை மீண்டும் திறக்க நிதியமைச்சர் கே.எம். மணி ரூ. 5 கோடி லஞ்சம் கேட்டு, முதல் தவணையாக ரூ. 1 கோடி பெற்றார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட் டுள்ளது என உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள் ளார்.

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின் முதல்வர் உம்மன் சாண்டி, ‘வரும் 2023-ம் ஆண்டுக்குள் கேரளத்தில் முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும்’ அறிவித்தார்.

முதல் கட்டமாக, ஐந்து நட்சத்திர விடுதிகள் தவிர, அதற்குக் கீழ் உள்ள விடுதிகளில் செயல்பட்டு வந்த 418 மதுபார்களின் உரிமத்தைப் புதுப்பிக்க கேரள அரசு மறுத்து விட்டது.

மொத்தம் 700 மதுபார்களை மூடி, அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, கேரள பார் உரிமையாளர்கள் வழக்குத் தொடர்ந்தனர். கேரள உயர் நீதிமன்றம் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

ரூ. 5 கோடி லஞ்சம்

இதனிடையே, மூடப்பட்ட 418 பார்களை மீண்டும் திறப்பதற்கு கேரள நிதியமைச்சர் கே.எம்.மணி ரூ.5 கோடி லஞ்சம் கேட்டதாகவும், முதல்கட்டமாக ரூ.1 கோடி அவருக்கு கொடுக்கப்பட்டதாகவும் கேரள பார் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் பிஜு ரமேஷ் குற்றம்சாட்டினார்.

அமைச்சர் லஞ்சம் பெற்ற விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் அச்சுதானந்தன் உட்பட பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தின.

லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை

நிதியமைச்சர் லஞ்சம் பெற்ற விவ காரம் தொடர்பாக, ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருத்து

“கே.எம். மணி லஞ்சம் கேட்டார் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள்” எனக் கூறியுள்ள முதல்வர் உம்மன் சாண்டி, “சென்னிதாலாவின் விசாரணை அறிவிப்பு சட்டப்பூர்வ நடைமுறை” எனத் தெரிவித்துள்ளார்.

          
SCROLL FOR NEXT