முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் சென்னை வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தியபோது, ப.சிதம்பரம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராகி வாதிட்டார்.
சென்னையில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகளில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த பரபரப்பான வேளையில் ப.சிதம்பரம் பெங்களூருவில் உள்ள கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் வழக்கறிஞராக ஆஜராகி வாதிட்டார்.
‘மெட்ரோ
கேஷ் அண்ட் கேரி' நிறுவனத்துக்காக ஏற்கெனவே ஒப்புக்கொண்ட வழக்கில் ஆஜராவதற்காக நேற்று காலை 11.30 மணிக்கு நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்தார். ப.சிதம்பரத்தின் வருகை தொடர்பாக தகவல் பரவியதும் பத்திரிகையாளர்களும், வழக் கறிஞர்களும் நீதிமன்றத்தில் அதிகளவில் குவிந்தனர்.
ஆனால் ப.சிதம்பரம் ஊடகங் களிடம் பேசுவதை தவிர்த்தார். மாலைவரை நீதிமன்றத்தில் இருந்த ப.சிதம்பரம் மிகவும் இயல்பாக காணப்பட்டார். வழக்கறிஞர்களிடமும், மூத்த பத்திரிகையாளர்களிடமும் நீண்ட நேரம் சிரித்து பேசிக்கொண்டு இருந்தார். ‘மெட்ரோ கேஷ் அண்ட் கேரி' நிறுவனத்தின் தலைவர் கணேஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடி ஆணையை எதிர்த்து நீதிபதி கே.எஸ்.முதுகல் முன்னிலையில் ஆஜராகி வாதிட்டார்.இதை பார்ப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்த தால் நீதிமன்ற அறை எண்.11-ல் கூட்டம் நிரம்பி வழிந்தது.
நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த ப. சிதம்பரத்திடம், சிபிஐ சோதனை தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ப. சிதம்பரம் சிரித்தவாறே, “அது தொடர்பாக பதில் அளிக்கவில்லை''என கூறிவிட்டு, புறப்பட்டு சென்றார்.