இதுவரை ரூ.70,000 கோடி அளவிலான கறுப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதில் இந்தியர்கள் அயல்நாடுகளில் பதுக்கியுள்ள ரூ.16,000 கோடியும் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
கறுப்புப் பண விவரங்களை வெளியே கொண்டு வரும் சிறப்பு விசாரணைக் குழுவின் உதவித்தலைவர், ஓய்வு பெற்ற நீதிபதி அரிஜித் பசாயத், கட்டாக்கில் பொருளாதார மற்றும் நிதிவிவகாரங்களைக் கையாளும் பல்வேறு அரசு அதிகாரிகளைச் சந்தித்த பிறகு இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணைக் குழு தங்களது 6-வது இடைக்கால அறிக்கையை ஏப்ரல் முதல்வாரத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.
கறுப்புப் பண உருவாக்கத்தை அதன் முளையிலேயே கிள்ளி எறிய சிறப்பு விசாரணைக் குழு பலதரப்பட்ட பரிந்துரைகளை தங்களது உச்ச நீதிமன்ற இடைக்கால அறிக்கைகளில் தந்துள்ளதாகவும், “எங்களது பெரும்பாலான பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. சில பரிந்துரைகள் பரிசீலனையில் உள்ளன” என்றார் அரிஜித் பசாயத்.
மேலும், “கையில் ரொக்கமாக ரூ.15 லட்சம் அல்லது அதற்கு மேல் வைத்திருந்தால் அது கணக்கில் காட்டப்படாத வருவாய் என்று கருதப்பட வேண்டும் என்ற எங்களது பரிந்துரையையும் மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. எங்களது பரிந்துரையின் பேரில்தான் ரூ.3 லட்சத்திற்கும் கூடுதலான ரொக்கப் பரிவர்த்தனை சட்ட விரோதம், தண்டனைக்குரிய குற்றம் என்று மத்திய அரசு அறிவித்தது” என்றார்.
ஒடிஷாவின் பொருளாதார குற்றங்கள் மற்றும் கறுப்புப் பணம் கண்டுபிடிப்பு நடவடிக்கைகள் குறித்து பசாயத் கூறும்போது, அனைத்து விசாரணை அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பை உறுதி செய்யவே இங்கு சந்தித்தோம், இதன் மூலம் தவறாகச் சேர்க்கப்பட்ட சொத்து, பண விவரங்கள் வெளியே வரும், என்றார்.
அதே போல் தனியார் கல்வி நிறுவனங்கள், நகைக் கடைகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், தங்களையே கடவுள் என்று அழைத்துக் கொள்ளும் சாமியார்கள், மாஃபியா டான்கள் ஆகியோர் செய்யும் பல்வேறு நிதி முறைகேடுகள் தவறுகள் குறித்து விசாரித்து வரும் மாநில குற்றவியல் கிளை தங்களது கண்டுபிடிப்புகளை வருமானவரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் தெரிவித்து விசாரணையைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளதாகவும் பசாயத் கூறுகிறார்.